பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 23ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்தது.
அதன்பிறகு மேலும் 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாலியல் வழக்கில் இருந்து ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 21ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







