பிரதமர் மோடி தினமும் 14-16 மணி நேரம் உழைக்கிறார்!… 70 மணிநேர வேலைக்கு JSW தலைவர் ஆதரவு…

“நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி தினமும் 14-16 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்” என JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.  அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன நேர்காணலில்…

“நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி தினமும் 14-16 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்” என JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய இன்ஃபோஸில் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி,  சீனா மற்றும் ஜப்பான் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட விரும்பினால்,  இளைஞர்கள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும்,  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு,  ஜெர்மனி மற்றும் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டின் நலனுக்காக அதிக நேரம் உழைத்தனர்.  இந்தியாவில் உள்ள இளைஞர்களும் கடுமையாக உழைக்கிறார்கள்.  ஆனாலும் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பல்வேறு வகையான நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தொழிலதிபர்கள் மத்தியில் இதற்கு ஆதரவான நிலைப்பாடே வந்து கொண்டு இருக்கிறது.  இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் கருத்துக்களை,  JSW குழுமத்தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் ஆதரித்து பேசினார்.

JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால்,  நாராயண மூர்த்தியின் கருத்துக்களை முழு மனதுடன் ஆதரிப்பதாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாட்டிற்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை எனும் கலாச்சாரம் தேவையில்லை என்றும் கூறினார்.

நமது பிரதமர் நரேந்திர மோடி தினமும் 14 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக உழைக்கிறார்.  என் தந்தை வாரத்தில் 7 நாட்களும் 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்கிறார்.  நான் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வேலை செய்கிறேன்.  நமது வேலை நமது நாட்டை முன்னேற்ற பயன்பட வேண்டும்.  இந்தியாவில் வாழ்வியல் சூழ்நிலைகள், கலாசாரம் என்பது மற்ற வளர்ந்த நாடுகளில் இருந்து வேறுபட்டது என ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்த நாடுகள் வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் வேலை செய்கிறார்கள்.  ஏனெனில் அவர்களின் முந்தைய தலைமுறையினர் அதிக நேரம் கடுமையாக உழைத்தனர்.  இந்தியாவின் மிகப்பெரிய பலம் இளைஞர்கள் தான்.  உலகிலேயே அதிக அளவு இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர்.  நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கு இளைய தலைமுறையினர் ஓய்வு நேரத்தை விட வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இளைஞர்கள் தற்போதிருந்தே கடுமையாக உழைத்தால் 2047இல் இளைஞர்கள் அதன் பலனை பெறுவார்கள என்று JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.