”தயவு செய்து யாரும்…” – ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை!

ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.

சூர்யா –  கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் படத்திற்கான புரமோஷன் நடைபெற்றது. இதில் சூர்யா உட்பட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சூர்யா பேசியதாவது, “இது கார்த்திக் சுப்புராஜ் படம் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும். ரெட்ரோ என்றாலே பின்நோக்கி பார்ப்பது தான். உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன்

இரண்டரை மணி நேரம் நீங்கள் திரையரங்கு வந்தால் உங்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வேன். இந்த படத்துக்காக சிகரெட் அடித்துள்ளேன். தயவு செய்து யாரும் சிகரெட் அடிக்காதீங்க. ஒரு பஃப் தானே என்று ஆரம்பித்தால் விட முடியாது. நான் அதை ஆதரிக்க மாட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.