கர்நாடக மாநிலத்தில் பிக்கப் டிரக் வாங்க வந்த விவசாயியை கார் ஷோரூம் விற்பனையாளர் ஏளனமாக பேசி அவமானப்படுத்தியதையடுத்து டிரக் வாங்க முழு தொகையுடன் விவசாயி திரும்பி வந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பிக்கப் டிரக் வாங்க விவசாயி கெம்பேகவுடா சென்றுள்ளார். ஆடையை பார்த்து மனிதர்களை எடைபோடுவதப்போல அந்த ஷோரூமின் விற்பனையாளர் விவசாயியை ஏளமான பேசியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“10 ரூபாய் கூட உன்கிட்ட இருக்காது. நீ கார் வாங்க வந்துட்டியா?” என விற்பனையாளர் விவசாயியை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கெம்பேகவுடா “என்னையே அசிங்கப்படுத்திட்டியா. இந்தா இரு வாரேன்” என ஒரு மணிநேரத்தில் ரூ.10 லட்சத்துடன் திரும்ப வந்து விற்பனையாளருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விவசாயின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் இதில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இறுதியாக விற்பனையாளர் விவசாயியிடம் மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்தது. விவசாயி விற்பனையாளரை திட்டிக்கொண்டே “இவ்ளோ பேசினதுக்கு அப்புறம் நான் உன் கடையில கார் வாங்க மாட்டேன்” என கூறி ரூ.10 லட்சத்துடன் வெளியேறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவில் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.