அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.இதேபோன்று அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து நிறைவு செய்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கு குறித்து மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில் “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் நீதிமன்ற காவல் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன் படுகிறேன்.
மருத்துவமனை சிகிச்சை காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா என்பதை பொறுத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும். காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்த போதும், அவரை காவலில் எடுக்க அமலாக்கத் துறை முயலவில்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு காவல் எடுக்கலாம். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்க்காத நிலையில், அதன் பின் நடக்கும் சோதனை, விசாரணை ஆகியவற்றை எதிர்க்க முடியாது. கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுவதாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.