மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்களை, நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் அரங்கேறிய விதம் குறித்து வெளியான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்த பிறகு, மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மே 4ம் தேதியன்று, மைதேயி இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 1000 நபர்கள் அடங்கிய கும்பல், துப்பாக்கிகளுடன் கூடிய பயங்கர ஆயுதங்களுடன் பி பைனோம் கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.
அப்போது பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை சூறையாடி, பொருட்களை களவாடிய அந்த கும்பல், வீடுகளை தீயிட்டு எரித்து சேதப்படுத்தி உள்ளது.
அப்போது அந்த கும்பலால் கொல்லப்படுவோம் என பயந்து இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 5 பேர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைவதற்காக அருகிலிருந்த வனப்பகுதி வழியாக நுழைந்து தப்பி சென்றுள்ளனர்.
ஐந்து பேரையும் போலீசார் மீட்ட நிலையில், நாங்க்போப் காவல்நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் காவலர்களை வழிமறித்த கும்பல் ஐந்து பேரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அப்போது, 5 பேரில் ஒரு நபரை அடித்தே கொன்ற அந்த கும்பல், 3 பெண்களையும் ஆடைகளை களைய செய்து நிர்வாணப்படுத்தியுள்ளது.
மேலும், அதில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தனது சகோதரியை காப்பாற்ற முயன்ற மற்றொரு ஆணும் அந்த கும்பலால் சம்பவ இடத்திலேயே கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த பகுதியில் இருந்து மூன்று பெண்களும் உள்ளுர் மக்களின் உதவியுடன் தப்பிய நிலையில், சம்பவம் நடந்து ஏறத்தாழ 77 நாட்களுக்கு பிறகு இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த கொடூரத்தின் வீடியோ வெளியான நிலையில், 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.