பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் ‘தம்’ என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற புனித் ராஜ்குமார், இப்போது ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவருக்கு அஸ்வினி ரேவந்த் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். அவரது மரண செய்தி அறிந்ததும் மருத்துவமனையின் முன் அவரது ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது