உத்தரப்பிரதேசத்தில் ரூ.451 கோடி செலவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.451 கோடி செலவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த ரூ.121 கோடி ரூபாயை உத்தரப்பிரதேச அரசு செலவிட்டுள்ளது. இந்த மைதானத்தின் கட்டுமானத்திற்காக பிசிசிஐ ரூ.330 கோடி செலவிடவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன், வாரணாசியின் கஞ்சாரியில் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு சிவபெருமானை மையமாக வைத்து அமைக்கப்படவுள்ளது. அதன்படி, மைதானத்தில் இருக்கும் இரவு விளக்குகள் திரிசூல வடிவத்தில் இருக்கும்.இந்த கிரிக்கெட் மைதானத்தின் கூரைகள் பிறை வடிவத்திலும், படித்துறை படிகள் அடிப்படையிலான இருக்கைகள் மற்றும் முகப்பில் பில்விபத்ரா வடிவ உலோக தாள்கள் போன்ற வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் பகுதி வாரணாசியில் உள்ள மலைத்தொடர்களின் சின்னமான படிகளை போன்று வடிவமைக்கப்படும். இந்த மைதானத்தில் 30,000 பார்வையாளர்கள் அமரலாம்.
இந்நிலையில் இந்த விளையாட்டு மைதானத்திற்கான பணிகளை தொடங்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மைதானம் 2025 டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.