ஆன்லைன் விளையாட்டுகள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எப்படி தெரிய வந்தது என பெற்றோர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை சேர்ந்தவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? பெற்றோர்களே என கேள்வி எழுப்பினர்.
மேலும், இதில் அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை.
அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.







