வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாண்டோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிம்லாவில் பெய்த கனமழையால் 3 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.







