கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டரில் காவல்துறையால் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர் அமல் ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி கார் நின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காரின் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.
இதில் உயிரிழந்த வினோத் (எ) சோட்டா வினோத் (35) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும், அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ் (32) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும், அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
தப்பியோடிய குற்றவாளிகள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை, காரிலேயே விட்டு சென்றனர். இதனையடுத்து அதனை தடவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை மருத்துவமனையில் ரவுடிகளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல் ராஜ் என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது..
” துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன். குற்றவாளிகள் இரண்டு பேர் சுடப்பட்டு இருக்கிறார்கள். தப்பி சென்ற இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவாக அவர்களும் கைது செய்யப்படுவார்கள் “ என தெரிவித்தார்.