காதலைத் தெரிவிக்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலனுக்கு கடைசி நேரத்தில் நடந்த சோக சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலிக்கும் பெண்ணிடம் வித்தியாசமான முறையில் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். இதற்காக பல மாதங்கள் திட்டமிட்டு, நண்பர்கள், உறுப்பினர்களை ஒன்று கூட வைத்து, மோதிரம் வாங்கி தங்களுடைய காதலை பலரும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், சே என்ற நபர் தனது காதலைத் தெரிவிப்பதற்காக பிரம்மாண்ட ஏற்பாடு செய்த நிலையில், கடைசி நேரத்தில் சொதப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காதலர் தினத்தையொட்டி, சே என்ற நபர் தனது தோழியிடம் காதலை சொல்ல முடிவு செய்துள்ளார். இதையடுத்து, காதலர் தினத்தன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள கடற்கரையில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பிரம்மாண்டமான ஏற்பாட்டைச் செய்துள்ளார். இச்சம்பவம் கடற்கரைக்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சே தனது தோழி சாயிடம் காதலைக் கூறும் நேரத்திற்காக பலரும் காத்திருந்தனர்.
ஆனால், அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. தனது காதலி முன்பு மண்டி போட்டு சே ப்ரோபோஸ் செய்வதற்காக, தனது கையில் வைத்திருந்த மோதிரத்தை சாயின் கையில் போட முயன்றார். அப்போது, அந்த மோதிரம் எதிர்பாரதவிதமாக கடற்கரை மண்ணில் விழுந்து காணாமல் போயுள்ளது.
பிரம்மாண்ட அலங்கரிப்புகளுக்கு நடுவே தனது காதலைத் தெரிவிக்கும் போது நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஒரு வழியாக மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சே தனது காதலியின் கைவிரலில் மோதிரத்தை அணிவித்தார்.
இந்நிலையில், சாய் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-ம.பவித்ரா








