அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என திமுக எம்பி கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநர் செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அத்துடன் தமிழ்நாடு அரசின் ஆட்சி அதிகாரத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி முதலமைச்சர் மூ.க. ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
அதில், “அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.