தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான சேவையை முழுமையாக நிறுத்தகோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகளால் பல இடங்களில் விமானங்களை அவசரமாக தரை இறக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இத்தகைய தொழில்நுட்ப கோளாறுகள் ஏராளமான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
எனவே, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆகியவை நிறுவனம் தொடர்பான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து முடிக்கும் வரை அந்நிறுவனத்தின் விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராகுல் பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விமான போக்குவரத்து இயக்குனரகம் தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உரிய அமைப்பு என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இதனை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
– இரா.நம்பிராஜன்








