இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் ஐசிஎம்ஆர் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சி முடிவுகள் பிரபல மருத்துவ இதழான “தி லான்செட்” ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4% குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.8% நோய் பரவல் உள்ளது. இதன்படி இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் தேசிய அளவில் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31% பேரும் குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8% பேரும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்நிலையில் தமிழ்நாட்டை பார்த்தோம் என்றால் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களில் 10% அதிகமாகவும் கிராமப்புறங்களில் 7.5 முதல் 9.9% வரை நீரிழிவு நோய் பரவல் உள்ளது. தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் நோய் பரவல் 10% முதல் 14.9% வரையிலும், கிராமப்புறங்களில் 5 முதல் 9.9% வரை வரையிலும் உள்ளது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய பாதிப்பு நிலை நகர்ப்புறங்களில் அதிகம் காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் முன்பைவிட நோய் பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பழக்கம், மன அழுத்தத்தை குறைப்பது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம்.
ஐசிஎம்ஆர்−ன் ஆய்வறிக்கை வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது முறையான உணவுப் பழகத்தை பின்பற்றி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். மேலும் அரசும் இதை கருத்தில் கொண்டு மருத்துவத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பாா்ப்பாக உள்ளது.
− செளந்தர்யாகண்ணன்