மோடி அரசுக்கு எதிராக ஒன்று சேரும் இடதுசாரிகள்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, இடதுசாரிகள் மற்றும் விசிக இணைந்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.   மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக…

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, இடதுசாரிகள் மற்றும் விசிக இணைந்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக செயல்படுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அவர்கள், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, மிகப்பெரிய இயக்கம் நடத்த உள்ளதாகவும், வரும் 25 முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மறியல் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் ஒரு சிறிய அளவை குறைத்து உள்ளதாக கூறிய அவர்கள், மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 200% வரியை உயர்த்திவிட்டு, அதில் 6% மட்டுமே குறைப்பது சரியாக இருக்காது என்றும், முழுமையாக செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேபோல் வட மாநிலங்களில் கோதுமை பெரிய பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாட்டில் அதுபோன்று நியாயவிலை கடையில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.

 

வேலைவாய்ப்பு இல்லாமல், இளைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என்றார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் தவறுதல் காரணமாக பஞ்சு விலையும் உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 12 ஆயிரம் அளவிற்கு பருத்தி விலை உயருகிறது என்றும், மத்திய அரசு பருத்தியை சேமிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது என்றும், மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய வலிமையான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தான் இந்த இயக்கத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், அதன்படி 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

மாநில அரசுக்கு தரவேண்டிய வரியை மத்திய அரசு வழங்கினால், அடுத்த நாளே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கூட்டாக கோரிக்கை வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.