அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவிற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஈரோடு மாவட்டம்…

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவிற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,  அதிமுக  பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைப்பு செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரும் 22ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என  சென்னை அல்லி குளத்தில் உள்ள 23 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.