ராமர் கோயில் பிரதிஷ்டை – அயோத்தியில் கிடுகிடுவென உயர்ந்த நிலத்தின் மதிப்பு!

ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தியில் காலிமனைகளின் விலை கிடுகிடுவென் உயர்ந்து வருகிறது.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் …

ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தியில் காலிமனைகளின் விலை கிடுகிடுவென் உயர்ந்து வருகிறது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில்,  கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.  இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.  சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு,  1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் மோடி,  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,  உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்,  உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு கோயிலுக்கு தினமும் வருகை தருவோரின் எண்ணிக்கையை 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வருகை தரக்கூடும் என எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தர உள்ளதால் ஏறக்குறைய 15 ஹோட்டலுக்கு அரசால்  அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.  அதேபோல அயோத்தி நகரத்தில்  உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை உபி அரசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அயோத்தி நகரம் பொருளாதார மையமாக மட்டுமின்றி,  கலாச்சார மையமாகவும் மாறப்போக உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ள நிலையில் அங்குள்ள காலி மனைகள் மற்றும் கட்டடங்களின் மதிப்புகள் அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு இடம் வாங்கிய செய்தி வெளியாகின.  இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட காலி மனைகள் 10 முதல் 20 மடங்கு விலையேறி வருகிறது.

கடந்த 2019ல் பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பு வெளியான போது அயோத்தியில் ஒரு சதுர அடியின் விலை ரூ.400 முதல் ரூ.700 வரை இருந்தது.  ஆனால் தற்போது அயோத்தில் காலி மனையின் விலை ரூ.1500 முதல் ரூ.3000 வரை உயர்ந்துள்ளது.  அயோத்தியில் ராமர்  சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு பல பகுதிகளில் நிலம் அரசு கையகப்படுத்தியது போக பல மனைகள் விற்றுத் தீர்ந்து விட்டதால் குறைந்த அளவே உள்ள நிலங்களின் மதிப்பு மேலும் உயர்ந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.