கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதால் அமோக வெற்றி நிச்சயம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். பாஜகவை தோற்கடிக்க நாங்கள் எழுப்பிய முக்கியப் பிரச்னை ’40% கமிஷன் அரசு’ என்ற முழக்கம். எங்களின் அந்த முழக்கத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு காங்கிரஸுக்கு இந்த பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.