பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம், சம்பள உயர்வு குறித்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பானது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் மீண்டும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யும் வரை ரூபாய் 20600 ஊதியமாக வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு இடைநிலை ஆசிரியருக்கு வழங்குகிற அடிப்படை சம்பளம் ஆகும்.
அதன் பிறகு பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தது போன்று தமிழகத்திலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 12,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதே திட்டத்தில் அலுவலக ஊழியர்களும் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இதில் அந்த அலுவலக ஊழியர்களுக்கு மட்டும் கடந்த நவம்பர் மாதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே திட்டத்தில் பள்ளிகளில் பணிபுரிகிற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் இந்த சம்பள உயர்வு வழங்கவில்லை.
எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.