சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! வதந்தி என காவல்துறை விளக்கம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வதந்தி எனவும்,  மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ்…

சென்னையில் இன்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வதந்தி எனவும்,  மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து தகவல் கிடைத்தவுடன்  குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் திரண்டனர்.  இதனையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும், சென்னை பாரிமுனை அரண்மனை காரன் தெருவில் செயல்பட்டு வரும் செயிண்ட் மேரீஸ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  சென்னை அடையாறு சிஷ்யா பள்ளி மற்றும் கோபாலபுரம் டிவிஏ பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

பூந்தமல்லி அருகே திருமழிசையில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  சென்னை ஓட்டேரி பகுதியில் செயல்பட்டு வரும் Sana Matric School பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளி அலுவலக இ -மெயிலுக்கு அனுப்பப்பட்டது.

மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி,  செட்டிநாடு வித்தியாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி,  கோபாலபுரம் DAV ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  மிரட்டலை அடுத்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து சென்றனர்.   இதனால்,  அனைத்துப் பள்ளிகளிலும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில்,  வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்றும்,  இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெயில் Johonsol01@gmail.com என்ற இமெயில் முகவரியில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் சென்றுள்ளது.  மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.