அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் கட்சி பாமக- அன்புமணி

அதிமுக, திமுக அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்கள் என்றும் பாமக மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி…

அதிமுக, திமுக அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்கள் என்றும் பாமக மட்டும்தான்
அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் 3
நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார
நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான நேற்று ஒகேனக்கல்லில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை
தொடங்கினார்.
அதனையடுத்து 2 வது நாளாக இன்று குரும்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர்
உள்ளிட்ட இடங்களில் பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டபோது அன்புமணிக்கு கட்சி தொண்டர்கள் பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு வணிகர்கள் மற்றும் பேருந்துகளில் சென்ற பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தின் பயன்கள் பற்றியும், தற்போது தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர்  மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், வாழ்வாதாரம் இல்லாமல்,  ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் தேடி  செல்கின்றனர் என்றார்.  எனவே சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி உபரிநீர் திட்டம் குறித்து அதிமுகவுக்கும் திமுகவிற்கும் கவலையில்லை என்று விமர்சித்த அன்புமணி ராமதாஸ்,  அதிமுக, திமுக அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்கள் பாமக மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது எனக் கூறினார். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பற்றி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியாது எனக் கூறிய அவர், இந்த திட்டத்தை  கொண்டுவரவேண்டும் என முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தியது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாய இடுபொருள்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான இலவசம் வேண்டும், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட
வாக்குக்கான இலவசங்கள் வேண்டாம் என பாமக கடந்த 10 ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக கூறினார்.  இதுபோன்ற இலவசங்களால் தமிழ்நாட்டிற்கு ஆறு லட்சத்து
40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் இதற்கு தமிழகம் 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது என்று கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவிலேயே அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.