பல்வேறு மாநிலங்களில் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
விவேகானந்தா கேந்திரம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என.ரவி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் பெயரில் விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது உரையில், “ இந்த நாட்டிற்காக அனைத்தையும் தந்தவர் வ.உ.சி. இவர் வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்பு இருந்த போதும் எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தார். சிதம்பரனார், விவேகானந்தர், பாரதியார் இவர்களின் பார்வையில் தேசத்தின் மீதும் ஒன்றாகவே இருந்தது.” என்று குறிப்பிட்ட அவர்
“வ.உ.சி மக்களுக்காகவே வாழ்ந்து தனது சொத்துக்களை இழந்தார். இவர் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளால்தான் நாடு சுதந்திரம் பெற்றது. நாடு வளர்ச்சி அடைய இந்தியாவின் 4 தூண்களும் ஒன்றாக வளர வேண்டும். நாடு வளர்ச்சி அடைய வ.உ.சி போன்றவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையற்ற வரலாறுகளை சொல்வதை தவிர்க்க வேண்டும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சனாதன தர்மத்தின் மூலமாகவே இந்தியாவின் வளர்ச்சி அமையும். சனாதன தர்மத்தின் மூலமாகவே பாரதம் கட்டமைக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும் இந்தியா 150 நாடுகளுக்கு கோரோன தடுப்பூசியை ஏற்றுமதி செய்து பிறரின் துன்பத்தில் உதவியுள்ளது.”
“இளைஞர்களிடத்தில்தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. அரசால் மட்டும் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. ஒரே பாரதம் உன்னத பாரதம் தற்சார்பு பாரதம் என்பது நமது முழக்கம் இருக்க வேண்டும்.”என்று கூறிய அவர்,
அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும், இத்திட்டம் 4 ஆண்டுகளில் இளைஞர்களின் நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும்.
இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும், “21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும். திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். அக்னிபத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில் ஒரு சிலர் தவறான வழிகாட்டுதலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள்.”
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதற்கான போராட்டங்கள் நடைபெறுவது தவறான முன்னுதாரணம். இளைஞர்களின் உழைப்பால் 2047 ஆம் ஆண்டில் இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக இந்தியா மாறும். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் அதை விடுத்து தவறான வழியில் செல்லக் கூடாது. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் ஜோகோ ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.