குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யும் என அதன் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.
குஜராத்தின் முதலீட்டாளர் மாநாடு ‘வைப்ரண்ட் குஜராத்-2024’ இன்று தொடங்கியது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்துக்கு சென்றடைந்தார். மாநாட்டை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, இந்த மாநாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தவிர, டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், யுஏஇ டிபி வேர்ல்ட் சிஇஓ சுல்தான் அகமது பின் சுலாயம் உட்பட பல பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க அமர்வின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். இதனுடன், மாநிலத்தில் முதலீடு தொடர்பான அந்த நிறுவனத்தின் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. மற்ற தொழிலதிபர்களும் குஜராத் குறித்து பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, புதிய முதலீட்டை அறிவித்தார். அதன்படி, குஜராத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக அறிவித்தார். இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட ரூ.55,000 கோடி முதலீட்டு அறிவிப்பில், அதானி குழுமம் ஏற்கனவே ரூ.50,000 கோடி முதலீடு செய்துள்ளது என்றார்.
அதானி குழுமம் இப்போது கட்ச் பகுதியில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 30 ஜிகாவாட் திறன் கொண்ட பசுமை எரிசக்தி பூங்காவை உருவாக்கி வருவதாகவும், அது விண்வெளியிலிருந்து கூட பார்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
2014 முதல், இந்தியா உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 185 சதவீத வளர்ச்சியையும், தனிநபர் வருவாயில் 165 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது என்றும் அரசியல் மற்றும் கொரோனா உள்ளிட்ட சவால்களுக்கு இடையே சாத்தியமானது என்றும் அதானி மேலும் கூறினார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது உரையில், குஜராத்தை நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான நுழைவாயில் என்று விவரித்தார். ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அது குஜராத்தி நிறுவனமாகத்தான் எப்போதும் இருக்கும் என்று கூறினார். மேலும், இந்தியாவின் முதல் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் வசதியை ஹசிராவில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கும் என்றும் அம்பானி அறிவித்தார்.