காரை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்ததால், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் வெளியேறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தமிழில் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, இரு நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியது. இதனால் போக்குவரத்து தடைபட்டதால் சாலையில் காத்திருந்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சாலையை ஏன் மறிக்கிறீர்கள்? என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜோஜு ஜார்ஜ், குடிபோதையில் இருந்ததாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் அவரை தாக்க முற்பட்டனர். போலீசார், ஜார்ஜை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து மராடு போலீசில், காரை சேதப்படுத்தியது தொடர்பாக ஜோஜு புகார் செய்தார். கொச்சியின் முன்னாள் மேயரும் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவருமான டோனி சாமினி உட்பட காங்கிரஸ் கட்சியினர் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோஜுவின் செயலுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உட்பட அந்தக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜோஜு ஜார்ஜின் சமூக வலைதளப் பக்கங்களிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவரை கடுமையாகத் திட்டி பதிவிட்டனர். இதனால் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் வெளியேறியுள்ளார். அவர் தனது சமூக வலைதளக் கணக்குகளை செயலிழக்க செய்துள்ளார்.