அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கொலை – ஆசிரியர் உள்பட மூவர் கைது!

ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.  சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(54).  இவருக்கு…

ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(54).  இவருக்கு லஷ்மி (48) என்ற மனைவியும் சந்தோஷ் (20), சந்திரகுமார் (16) என்கிற 2 மகன்களும் உள்ளனர்.  வெங்கடேசனின் மகன் சந்தோஷ் பி.டெக் படித்து வருகிறார்.  சந்திரகுமார் பிளஸ் 2 முடித்துள்ளார்.  இந் நிலையில் வெங்கடேசனின் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் அரசு வேலைக்காக பலரிடம் பணம் பெற்று சுமார் 12 கோடி ரூபாயை வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை கணேசனிடம் கொடுத்துள்ளார்.  சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் சேரும்போது அது போலியான ஆணை என்பது தெரிய வந்தது.  அவர்கள் இதுகுறித்து கணேசனிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெங்கடேசனிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஆசிரியர் கணேசன் பலமுறை அலைந்துள்ளார்.

இருப்பினும் வெங்கடேசன் பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார்.  வெங்கடேசனின் இளைய மகனை நீட் தேர்வு எழுத இருந்துள்ளார்.  இதனையடுத்து வெங்கடேசன் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  பின்னர் நிலம் கிரயம் தொடர்பாக சேலம் செல்வதாக கூறி,  வெங்கடேசன் சென்றுள்ளார்.  அவருடைய மகன் செல்போனில் தொடர்பு கொண்ட போது வெங்கடேசன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

வெங்கடேசன் வீடு திரும்பாததால் அவருடைய மகன் தந்தை காணவில்லை என குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.   இது குறித்து குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் வேல் மற்றும் காவலர்கள்,  ஆசிரியர் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன்

அவரிடம் நடத்திய விசாரணையில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் குப்பத்தில் உள்ள தனது அண்ணன் குமரேசன் என்பவருக்கு சொந்தமான கிரஷரில் வைத்து அடித்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலை கிரசருக்கு அருகிலேயே புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து குன்றத்தூர் போலீசார் ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  இதன் பேரில் ஊத்தங்கரை காவல்துறை நேற்று இரவு கிரஷரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு  ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட மூவரை குன்றத்தூர் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி லட்சுமி, அவருடைய மகன்களும் வந்தனர்.  இதனையடுத்து, ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் காவல் ஆய்வாளர் கந்தவேல், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வருவாய் ஆய்வாளர் கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் கணேசன் வெங்கடேசனின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

தொடர்ந்து, அதிகாரிகள் அந்த இடத்தை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தோண்டினர்.  பின்னர் வெங்கடேசன் நின்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடல்கூறாய்வு மேற்கொண்டனர்.  உடல் கூறாய்வுக்கு பின் வெங்கடேசனின் உடலை அவருடைய மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.