10ம் வகுப்பில் 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் மாற்றுத் திறனாளி மாணவர் அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 8,35,614 (91.39%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாற்று திறனாளி மாணவன் க்ரித்தி வர்மா பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் க்ரித்தி வர்மா இரண்டு கைகளும் இல்லாத ஒரு மாற்றுத் திறனாளி மாணவராவார்.
இன்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து உள்ளார். பள்ளியில் அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத் திறனாளி மாணவர் க்ரித்தியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.







