
இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மூலமாக எச்சரித்தும் 2015 பெருவெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிவர் புயலால் பெரும் இழப்புக்குள்ளான அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனடி நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வீடிழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு, வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி டெல்டாவில் ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை என தகவல் வருவதாகவும், பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கஜா புயலின் போது பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கைவிடும் நோக்கில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.







