துபாயில் 200 கோடி செலவில் நடைபெற்ற பிரபலத்தின் திருமணத்தில் பங்கேற்ற 17 பாலிவுட் ஸ்டார்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மகாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சௌரப் சந்திரகர் திருமணம் துபாயில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக சுமார் ரூ. 200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமணத்தில், நாக்பூரிலிருந்து துபாய்க்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. பாலிவுட் பிரபலங்கள், திருமண திட்டமிடுபவர்கள், நடன கலைஞர்கள், அலங்கார கலைஞர்கள் என அனைவரும் மும்பையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
ரூ.200 கோடி தொகையின் பெரும்பகுதி அந்த திருமணத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாலிவுட் பிரபலங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. டைகர் ஷ்ராஃப், சன்னி லியோன், பாடகி நேஹா கக்கர் உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்றனர்.
அதிஃப் அஸ்லாம், ரஹத் ஃபதே அலி கான், அலி அஸ்கர், விஷால் தத்லானி, எல்லி அவ்ர்ராம், பார்தி சிங், பாக்யஸ்ரீ, கிருதி கர்பண்டா, நுஷ்ரத் பாருச்சா, க்ருஷ்ணா அபிஷேக் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர் விசாரணைக்காக அமலாக்கத்துறையால் அழைக்கப்படலாம் என தெரிகிறது.
துபாயில் இருந்து ஆன்லைன் சூதாட்ட செயலியை இயக்கும் சத்தீஸ்கரை சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மீது ₹5,000 கோடி பணமோசடி குற்றச்சாட்டை அமலாக்கதுதறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.