தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள செய்தி அறிக்கையை சுட்டிக்காட்டி, ANI செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆப்கனிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் 6ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர். இது சர்வதேச அளவில் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இதற்கு, போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாததன் காரணமாகவே 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் பதில் அளித்திருந்தனர்.
இந்நிலையில், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதை தலிபான்கள் நிறுத்தி உள்ளனர். தலிபான்களின் கீழ் ஆப்கனிஸ்தான் வருவதற்கு முன்பு, தலைநகர் காபுல் உள்பட சில முக்கிய நகரங்களில் பெண்கள் வாகனங்களை ஓட்டியுள்ளனர். இனி அதற்கு வாய்ப்பு இல்லை எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆய்வுகளின்படி, உலகிலேயே உணவு பாதுகாப்பு இல்லாத மிக மோசமான நாடாக ஆப்கனிஸ்தான் மாறி இருக்கிறது. அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட ஆப்கனிஸ்தானில் 95 சதவீதம் பேர் போதிய உணவு இன்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.