‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, ‘கேம் சேஞ்சர்’ படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.








