#GoldRate | வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரு சவரன் இவ்வளவா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கிடையே, தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று மீண்டும் எகிறியது. தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.7,810-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ.7,905-க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.