காதல், ஆக்ஷன், டிராமா, காமெடி, ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் என பல வகையான ஜானர்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து விருந்து வைத்தவர் நடிகர் சியான் விக்ரம். 2000த்தின் தொடக்கம் முதல் திரையில் இவர் செய்த சாகசங்களின் தாக்கத்தால் மற்ற முன்னணி நடிகர்களுமே கூட நீளமாக முடி வளர்ப்பது, உடலை வருத்தி நடிப்பது என புதுப்புது அவதாரங்களை எடுக்க தொடங்கினர்.
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். இருந்தும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் நானே நடிப்பேன் என விடாப்பிடியாக உலக நாயகன் கமல் கூட ஒரே படத்தில் 10 அவதாரங்களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கதாநாயகர், காமெடியர், குணச்சித்திர நடிகர், அமெரிக்க அதிபர் என அனைத்திலும் ரவுண்டு கட்டினார். இயக்குநர் மட்டும் கொஞ்சம் கண் அசைத்திருந்தாலும் கதாநாயகியாவும் அவர் நடித்து அசத்தியிருக்கக்கூடும். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த ஜாக்கிசான் கூட, ‘10 கெட்டப்புகளிலும் கமலே நடிக்கிறார் என்றால் தமிழ் சினிமாவில் வேறு நடிகர்களே இல்லையா’ என்று கேட்டதாக ஒரு தகவலும் உண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ok, coming to the point.இப்படி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்களில் ஒருவரான சியான் விக்ரம் அதன் பிறகு தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை என்றே சொல்லலாம். ‘ஒரு வாட்டி புது கெட்டப்னா ஓக்கே ஒவ்வொரு வாட்டியும் ஒரு கெட்டப்னா எப்படிப்பா’ என விவேக் போல் ஆடியன்ஸை புலம்ப வைத்தார் விக்ரம்.
விக்ரமின் கடுமையான உழைப்பு, அசாத்திய திறமை, முழு அர்பணிப்பு ஆகியவைகள் குறித்து யாருக்குமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மகா கலைஞன் அவர். ஆனால் ஒரு நல்ல திரைப்படத்திற்கு முதலில் திரைக்கதை வலுவாக இருக்க வேண்டும். அதில் வரும் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமானதாக செதுக்கப்பட வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் புதிய கெட்டப்புகளையோ, அதற்கான மெனக்கெடல்களையோ ‘டிமாண்ட்’ செய்ய வேண்டும். அதன் பிறகு இறங்கி வித்தையை காட்டும் போது தான் திரையில் பொறி பறக்கும். ஆனால் விக்ரமோ! எத்தனை கெட்டப் , உடம்பை குறைக்க வேண்டுமா ஏற்ற வேண்டுமா என கேட்டுவிட்டுத்தான் கதையையே கேட்கிறாரோ..? என்று கூட அவர் மீது விமர்சனங்கள் உண்டு.
விக்ரமுக்கு கடைசியாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட் கொடுத்த படம் தெயத்திருமகள் தான். அதன் பிறகு வெளிவந்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி square, கடாரம் கொண்டான், மஹான் என கடந்த 10 வருடங்களாக வந்த படங்களை அனைத்துமே தோல்விப் படம் அல்லது சுமார் ரகம் தான். இந்நிலையில் விக்ரமின் அடுத்த படமான ‘கோப்ரா’வின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் ‘தசாவதாரம்’கமல் போலவே பல்வேறு கெட்டப்களில் காட்சி தருகிறார் விக்ரம். அதற்கேற்றார்போல பாடல் வரிகளும், “ஆதிரா ஆதிரா, உன் ரூபம் பலநூறா” வருகிறது. ‘ஏதே..நூறு கெட்டப்பா! மீண்டும் மீண்டுமா?’ என இணைய வாசிகள் ‘ஜெர்க்’ ஆனாலும், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தின் இயக்குநர் என்பதால் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் மனதை தேற்றிவருகின்றனர்.
மே 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வரும் சியான் விக்ரம், அந்த வெற்றிக்கனியை பறித்து ரசித்து புசிக்க வேண்டும் என்று வாழ்த்திக்கொள்கிறோம்.