மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஒரு பரிசீலனையும் மத்திய அரசிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2019ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக அத்தகைய பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்த ஆண்டு மத்திய அரசு நடத்தப் போகிறதா? எனவும் அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரே நேரத்தில் முடிக்கவும் விரைந்து எடுக்கவும் மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசிடம் ஏதேனும் பரிசீலனை உள்ளதா? என மக்களவை உறுப்பினர் ரவிகுமார் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு 2019ம் ஆண்டு மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்வதற்கான எந்த ஒரு பரிந்துரைகளும் மத்திய அரசிடம் இல்லை எனவும் உள்துறை இணையமைச்ச நித்தியானந்தா ராய் தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.