உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என ஐநா அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளால் கிட்டத்தட்ட ஒரு வருடம் உலகம் முழுவதும் உள்ள 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அதேபோல் உலகெங்கிலும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டுக்கும் அதிகமாக நேரடி பள்ளிப்படிப்பை தவறவிட்டுள்ளனர் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. அங்கிருந்து பரவி உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், மாணவர்கள் தங்களது நேரடியான பள்ளி படிப்பை தொலைத்தனர். பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தொடர்பாக 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்தாண்டு மார்ச் 2020 முதல் கடந்த மாதம் வரை தங்கள் பள்ளிகளை பெருமளவில் மூடி வைத்திருப்பதைக் காட்டுகிறது.
நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பள்ளிகள் மூடப்பட்டது தெளிவாகிறது. அங்கு கிட்டத்தட்ட 9.8 கோடி மாணவர்கள் இதனால் கவலை கொண்டுள்ளனர். ஆய்வு நடத்தப்பட்ட 14 நாடுகளில், பனாமா தனது பள்ளிகளை மிக நீண்ட காலமாக மூடியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எல் சால்வடார், பங்களாதேஷ் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் உள்ளன.
கொரோனா காரணமாக ஒரு வருடத்துக்கு முன்னர் மூடப்பட்ட பள்ளிகளால் பள்ளிக்கு நேரடியாக செல்ல முடியாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களில் கற்றலில் குறைபாடுகள் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ளது என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் தெரிவித்தார்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலர் திருமணத்திற்குத் தள்ளப்படுவது அல்லது குழந்தை தொழிலாளர்களாகும் ஆபத்து அதிகமாக காணப்படுகிறது யுனெஸ்கோவின் சமீபத்திய தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 8.88 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பள்ளிகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.