கொரோனா குமார் படத்தில் நடிக்க வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை ஒப்பந்தப்படி திரும்ப செலுத்த தேவையில்லை என நடிகர் சிலம்பரசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ.4.5 கோடி முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலம்பரசன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கொரோனா குமார் படத்திற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆகி விட்டதாகவும், ஒப்பந்தத்தின் படி ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து ஓராண்டிற்குள் படம் தொடங்கவில்லை என்றால் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்த நகலை தாக்கல் செய்தார்.
இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் தெரிவித்தார். தன் மீது தவறு இல்லாத நிலையில் ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் தற்போது சிம்பு வேறோரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து நடிகர் சிலம்பரசனின் பதில் மனுவிற்கு பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து அன்றைய தினம் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.