2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மேடையில் பேசும் போது 70 ஆண்டுகளாக விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது காங்கிரஸ் ஆட்சிதான் என்றும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படாவிட்டால் இன்னும் 3 மாதத்தில் மேற்குவங்க அரசு அறுத்தெரியப்படும் என்றும் எச்சரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது என்ற கூறிய அண்ணாமலை, அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வரும் ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக, வரும் தேர்தலில் காணாமல் போகும் என்று கூறினார். 2021ம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்கி தமிழக அமைச்சராக்க உள்ளோம் என்று உறுதிபட தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக கைகாட்டும் நபரை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள் என்றும் கூறினார். பாஜகவின் மாநில தலைவர் முருகன் முதலமைச்சர் தேர்வு குறித்து கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்ற அவர், தமிழக முதலமைச்சர் குறித்து எங்களது தேசிய தலைமை மூத்த தலைவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.