தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2021-22 ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் கட்ட உள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்கக்கோரி, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் 75,676 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டப்பட வேண்டும் எனவும், கூட்ட அரங்கு 1,200 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் 3,107 சதுர மீட்டர் பரப்புக்கு கூட்ட அரங்கு கட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள், அதிக தொகையை குறிப்பிட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.
மேலும், புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கட்டப்படுகிறதா என அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பிப்ரவரி மாதம் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட்டனர்.