தமிழக முதலமைச்சர் குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே, சில வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மற்ற வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமேடைகளில் முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி சதீஷ்குமார், லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இதுபோன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொதுவெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.
மேலும், அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை, தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ள கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். இறுதியில் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, மற்ற 5 வழக்குகளின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.