பாகிஸ்தானில் மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருந்து வருகிறது. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து, கிருஸ்தவம், சீக்கியம் போன்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பெரும்பான்மை இஸ்லாமிய மதத்தினரால் கட்டாய திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது நிற்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி நகரை சேர்ந்த தம்பதிகள் ரக்ஹா மசிஜ் – தெரசா. கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்களுக்கு மொத்தம் 6 மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகளான சோனியா என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த சஜீத் என்ற இஸ்லாமிய இளைஞர் திருமணம் செய்துகொள்ளுமாறு வர்புறுத்தியுள்ளார். மேலும் சோனியாவை மதமாற்றம் செய்து தனக்கு திருமணம் செய்து தரும்படி அவர்களின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சஜீத்தை திருமணம் செய்துகொள்ள அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ராவல்பெண்டியில் உள்ள ஃபசையா காலணி பேருந்து நிலையம் அருகே அந்த பெண்ணை வரவழைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளான். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சஜீத்தின் நண்பன் ஃபைசனை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சஜீத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.