
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவில் கரையை கடந்த நிவர் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி, அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோரும் உடன் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடலூர் மாவட்டத்தில் ரெட்டிச்சாவடி, கீழ் குமாரமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற முதல்வர், பாதிக்கப்பட்டடிருந்த வாழைத் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வாழை விவசாயிகளிடம் சேத மதிப்பையும் கேட்டறிந்தார். உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினம் முகாமில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளையும், உணவு உள்ளிட்டவை தரமாக வழங்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, கடலூர் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளின் சேதம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அப்போது, மீனவ பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் அப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக என்.என். சாவடி பகுதியில் புதுமண தம்பதியர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.