புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தற்சார்பு இந்தியா லட்சியத்தின் முக்கிய பகுதியான இந்த புதிய கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மக்களின் நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும், நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சார சிக்கனம் மிக்க, அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளை கொண்ட முக்கோண வடிவ கட்டடமாக, தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகில் இந்த புதிய கட்டடம் கட்டப்படும் எனவும் தற்போதைய மக்களவையின் அளவை விட மூன்று மடங்கு பெரிதாகவும், தற்போதைய மாநிலங்களவையை விட குறிப்பிடத்தக்க அளவு விசாலமாகவும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைய உள்ள அவைகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டடத்தின் உட்புறப் பகுதிகள் இந்திய கலாச்சாரத்தையும், நாட்டின் பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கட்டிடக் கலையையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் பொதுமக்கள் வந்து பார்க்கக்கூடிய வகையில் அமையவுள்ள பிரமாண்டமான மத்திய அரசியலமைப்பு கண்காட்சி கூடமும் கட்டட வடிவமைப்பு வரைபடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார புத்தாக்கத்திற்கு வழிவகுத்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளதாகவும், உயர்தர ஒளி-ஒலி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட மற்றும் வசதியான இருக்கை அமைப்புகள், சிறப்பான அவசரகால வெளியேறும் வசதிகள் ஆகியவற்றை இந்த கட்டடம் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது
நில அதிர்வு பகுதி-5 தேவைகள் உட்பட உயர்ரக கட்டமைப்பு பாதுகாப்பு தரநிலைகளை இந்த கட்டடம் உறுதிப்படுத்தும் எனவும் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் எளிதாக இருக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் மாநிலங்களவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.