மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது.
விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள் முற்றிலும் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மத்திய அரசு தரப்பிலோ சட்டங்களில் திருத்தம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முடிவு எட்டப்படாமல் விவசாயிகள் பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து தங்களது அடுத்த கட்டபோராட்டங்கள் குறித்து பஞ்சாப்பை சேர்ந்த 32 விவசாயிகள் சங்கத்தினரும் இன்று ஆலோசனை செய்து முடிவை அறிவிக்க உள்ளனர். இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை முற்றுகையிட்டு கட்டணம் வசூலிப்பதை தடுக்கப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
டெல்லி சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகளின் சங்கத்தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் சாந்து, விவசாயிகள் சங்கம் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதப்பட உள்ளதாக கூறினார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேண்டாம் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறினார்.