ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்வதற்கான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக கடந்த நவம்பர் மாதம் அவசர சட்டத்திற்கான ஒப்புதலை தமிழக ஆளுநர் வழங்கியிருந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு பிறகு இதற்கான சட்டமசோதாவை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அந்த சட்டமசோதாவில் பணம் வைத்து ஈடுபடுவோரையும், அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் போன்ற உபகரணங்களை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறைதண்டனை வழங்கவும் அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த சட்டமசோதா வழிவகை செய்கிறது. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா நாளைய தினம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட உள்ளது.