பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு முயன்ற ஆறு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானைத் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு குழுவிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி துணை இயக்குனர் அவர்கள் தலைமையில் கோட்டூர் பகுதியில் உள்ள பறவை மற்றும் மீன் வளர்ப்பு கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடையின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது இந்த சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணி புரியும் சாமிநாதன் மற்றும் துப்புரவு பணியாளராக பணி புரியும் காத்தவராயன் ஆகிய இருவரும் ரோந்து பணியின்போது வனப்பகுதியில் இருந்து இரு யானை தந்தங்களை எடுத்துவந்து அங்கலக்குறிச்சி யைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் மூலம் அதே பகுதியில் பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் பணிபுரியும் சாரதி மூலமாக யானையின் இரு தந்நங்களை தோட்டத்து சாலையில் பத்திரப்படுத்தி மணிகண்டன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் 5 பேரை கைது செய்த வனத்துறையினர் சாரதி என்பவரை அங்கலக்குறிச்சி பகுதியில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு தந்தம் கடத்தி விற்பனை செய்வதற்கு முயன்ற 6 பேரையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.